Thursday, February 5, 2009

சற்றே வித்தியாசமான பேருந்து அனுபவம்..

எனக்கு சமீபத்தில் பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட சற்று வித்தியாசமான அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்திறேன்.

என்னுடைய அலுவலகத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து நான் தங்கியிருக்கும் வீடு வரை செல்ல தேவையான பேருந்து கட்டணத்தில் என்னிடம் சில்லரை ஒரு ரூபாய் குறைவாக இருந்தது.நூறு ரூபாய் நோட்டை நீட்டினால் கண்டக்டரிடம் கன்னடத்தில் வாங்க வேண்டிய வசவை நினைத்து எப்படியாவது இருக்கும் சில்லரை காசை வைத்து சமாளிக்கலாம் என நினைத்து நான் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு முந்தைய நிறுத்தம் வரை என்னிடம் இருந்த சில்லறையை கொடுத்து டிக்கெட்டை வாங்கினேன்.இரண்டு நிறுத்தம் தானே சமாளித்து பயணம் செய்து விடலாம் என்ற தைரியம் தான்.

பயணத்தின் போதே என் மனதில் நிறைய யோசனைகள்,எந்த மாதிரி நான் மாட்டிக்கொள்ள இயலும் அதிலிருந்து எப்படி தப்பிப்பது.இதில் இரண்டு விதமான நிகழ்வுகள் நிகழ வாய்ப்புண்டு என்று நினைத்தேன்.ஒன்று நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் எந்த பிரச்சனையுமின்றி இறங்கி விடுதல்.பேருந்தில் அதிகம் கூட்டம் இருந்ததால் இவ்வாறு தான் நடக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.சரி வேறு எந்த மாதிரி நடக்கும் ஒரு வேளை நான் கொடுத்த கட்டணத்திற்கு இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டி பயணிக்கும் போது கண்டக்டர் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது.அய்யயோ ஏதும் தெரியாதது போல் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டிடுச்சா என அப்பாவியாய் கேட்டு,கண்டக்டரை பொறுத்த வரை ஒரு நிறுத்தம் தாண்டி என்னை பொறுத்த வரை சரியான நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம் என நினைத்தேன்.

இந்த இரு மாதிரியான நிகழ்வுகளை தவிர வேறு மாதிரி நிகழ வாய்ப்பில்லை என நினைத்திருந்தேன்.நீங்களும் நன்கு யோசியுங்கள் வேறு எந்த மாதிரி நடக்க வாய்ப்பிருக்கிறது, எனக்கு நடந்ததே.. நான் கொடுத்த கட்டணத்திற்கு உரிய நிறுத்தம் வந்ததும் என் அருகில் இருந்தவர் (ரொம்ப நல்லவர் .. வடிவேலு பாணியில் உச்சரிக்கவும்) சார் நீங்க எறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு என்று கண்டக்டர் காது பட கூறினார் அத்தோடு நிறுத்திகொள்ளாமல் இதை தாண்டுன நீங்க ஒன்றை கிலோ மீட்டர் பின்னாடி நடந்து வரணும் என்று வேறு கூறினார்.கண்டக்டர் அருகில் இல்லை என்றாலும் சமாளித்து விடலாம் அவர் என் அருகிலேயே நின்றிருந்தார்,வேறு என்ன செய்வது என்னை நானே நொந்த படியே பேருந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.ஒருவருக்கு உதவி செய்த பெருமிதத்தில் அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்....