Sunday, March 30, 2008

வலைப்பதிவில் என் முதல் பதிவு..

இந்த அவசர யுகத்தில் ஓய்வு நேரம் கிடைப்பதன்பதே அரிதாகி விட்டது, அப்படி கிடைக்கும் நேரத்தில் தங்கள் சொந்த வேலைகளை முடித்து விட்டு,எஞ்சியிருக்கும் நேரத்தில் என் வலைத்தளத்தை படியுங்கள் ....

கடைசியில், மன்னிக்கவும் முதலில் என்னை பற்றிய முகவுரை ...

இயற்பெயர் ர.ர.நவீன்பாபு,காரணப்பெயர்,புனைப்பெயர் ஏதுமில்லை.சொந்த ஊர் மதுரை,பிறந்ததும் வளர்ந்ததும் மதுரையில் தான்.இப்படி ஏன் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் ஆச்சர்யபடலாம்,ஏனெனில் இங்கே தாய்நாடு இந்தியா என்பது வெறும் பேச்சிற்கு தான்,ஆனால் நிஜத்தில் மொழி,ஜாதி,மாநிலவாரியாக நம் நாட்டை பிரித்திருக்கிறார்கள் நம் மரியாதைக்குரிய சிலர்(புரிந்துகொள்ளவும்).

தந்தை பெயர் ர.ச.ரெங்கன் மறுபிறவி என்று ஒன்று இருந்தால் எங்காவது ஒரு வயது குழந்தையாக இருப்பார் என நினைக்கிறேன்.

அம்மாவின் பெயர் ர.ர.மதனவல்லி,அப்பா,நான்,என் தங்கைக்காக வாழ்ந்துகொண்டிருந்த அவர்,தற்போது எங்கள் இருவருக்காக ...

நான் மதுரையில் பொறியியல் படிப்பை முடித்து விட்டது சிங்காரசென்னையில் வேலை பார்த்துகொண்டிருக்கிறேன்.

மற்றபடி தமிழில் நிறைய ஆர்வம் உண்டு...அந்த தைரியத்தில் வலைப்பதிவில் எழுத ஆரம்பிக்கிறேன் ......

முதலில் நான் எழுதியதில் மிகவும் ரசித்த கவிதைகள் சில ...

அலுவலக அவசரத்தில் கணவன் ..
பள்ளி அவசரத்தில் குழந்தைகள் ..
இவர்களின் பரபரப்பில் தாய்,
ஆயிரம் குற்றங்கள்,குறைகள்
எல்லாவற்றையும் சுமந்து கொண்டு
இன்முகமாய் இரவு உறங்கும் வரை
ஆனால் யாரும் கேட்பதில்லை ..
நீ சாப்பிட்டியா என்று...


கைக்கு எட்டியது ..
தலைக்கு எட்டவில்லை
விதவை பூக்காரி..


சற்றுமுன் தான் இறங்கிய பேருந்தும்,
தவறவிட்ட இரயிலும்,
விபத்துக்குள்ளாகும் போது..
அப்பாடா என நினைக்கும் மனது,
ஏனோ இறந்தவர்களை
எண்ண மறந்துவிடுகிறது....


தாய்க்கு பெயரளவில் முக்கியத்துவம்..
தந்தைக்கு பெயரிலேயே முக்கியத்துவம் ..
சந்தோஷ் சுப்ரமணியம்...


இறைவனை பார்க்க முடிவதில்லை
ஏழைகள் சிரிப்பதேஇல்லையே ...

பாத்திரத்தை தேய்த்து..
வயிற்றை கழுவும்..
வேலைக்காரி..

(வலை பின்னப்படும்..)